பிரதமர் மோடி விஷ்வகுருவா.? மவுனகுருவா.? முதல்வர் பட்டியலிட்ட கேள்விகள்…

MK Stalin : மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்தில் மட்டும் 5 முறை தமிழகம் வந்துள்ளார். நேற்று கன்னியகுமாரி வந்த பிரதமர், பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், மாநிலத்தில் ஆளும் திமுக அரசு மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் இன்னல்களுக்கு உள்ளவதற்கு காரணம் திமுக, திமுக தமிழ் பண்பாட்டின் முதல் எதிரி, திமுக ஒரு அரக்கன், திமுக , காங்கிரஸ் கட்சிகளை மக்கள் துடைத்தெறிய வேண்டும் என கடும் விமர்சனங்களை முன்வைத்தார். 

Read More – மீண்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

பிரதமரின் இந்த கடும் விமர்சனங்களை அடுத்து, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுகையில்,  பிரதமர் மோடி விஸ்வகுருவா.? மௌன குருவா.? என அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை அதில் குறிப்பிட்டுள்ளார்  

அதில் , கடந்த காலத்தில் திமுக செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி பொய் கூறி இருக்கிறார். திமுக அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறார். கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து ஏன் நிறுத்தவில்லை.? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?

அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த மத்திய பாஜக அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்? இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பாஜக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பிரதமரிடம் பதிலில்லை.

Read More – மாதம் ரூ.1000…புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு.!

தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்கு செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பதில் சொல்லுங்க பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை. ஆனால், வழக்கமான பொய்களும், புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலிக்கின்றன. விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்கத் திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம் என தனது விமர்சனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment