“நாட்டிற்கு பெருமை சேர்த்த நிஷாத் குமார்” – வாழ்த்திய பிரதமர் மோடி,எம்பி ராகுல்காந்தி…!

டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளி வென்றதற்கு பிரதமர் மோடி,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வதுபாராலிம்பிக் போட்டிகள்  நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில்,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து,டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார்.இதன்மூலம்,ஆசிய சாதனையை படைத்துள்ளார்.மேலும்,இது பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கம் ஆகும்.

இந்நிலையில்,டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளி வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“டோக்கியோவிலிருந்து மேலும் மகிழ்ச்சியான செய்தி வருகிறது! ஆண்கள் உயரம் தாண்டுதல் டி 47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. அவர் சிறந்த திறமை மற்றும் உறுதி கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க விளையாட்டு வீரர். அவருக்கு வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”தேசிய விளையாட்டு தினத்தில் இந்தியாவிற்கு மற்றொரு வெள்ளி.சிறந்த முயற்சிக்காக நிஷாத் குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்தீர்கள்”,என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.