அரசியலை விட்டு விலகத் தயார்.! இபிஎஸுக்கு உதயநிதி ‘போட்டோ’ சவால்.!

Udhayanidhi Stalin : நான் காலில் விழுவது போல போட்டோ காண்பித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் – உதயநிதி ஸ்டாலின்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். உதயநிதி விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியும், பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு உதயநிதியும் மாறி மாறி பிரச்சார மேடைகளில் பதில் கூறி வருகின்றனர்.

எய்ம்ஸ் செங்கல் :

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசை விமர்சித்து மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டப்படவில்லை எனக் கூறி, கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் செங்கல்லை காட்டி வாக்கு சேகரித்து வந்தார். இதனை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி முதலில் விமர்சனம் செய்தார்.  ‘ஏப்பா, உதயநிதி ஸ்கிரிப்ட்டை மாத்துப்பா. கல்லை காட்டி காட்டி போர் அடிக்குது.’ என்று விமர்சனம் செய்து இருந்தார்.

பல்லை காட்டும் இபிஎஸ் :

இந்த விமர்சனத்தை மேற்கோள் காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  பிரதமர் மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து. நான் கல்லை காட்டுகிறேன். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்லை காட்டுகிறார் என விமர்சனம் செய்தார்.

இபிஎஸ் பதிலடி :

அடுத்து, நேற்று தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், சிரித்தால் பல் தான் தெரியும் எனக் கூறி, அண்மையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உடன் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து நீங்கள் எதை காண்பிக்கிறீர்கள் என்று மீண்டும் விமர்சனம் செய்திருந்தார்.

அரசியலில் இருந்து விலக தயார்…

தற்போது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கும் போது சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படத்தை காண்பித்து, இதே போல நான் காலில் விழும் புகைப்படத்தை நீங்கள் காண்பித்தால், நான் அரசியலை விட்டு விலக தயார் என்று திருவண்ணாமலை பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக சவால் விடுத்தார்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.