நாடு திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்!

சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோனை வழங்கும் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என்றும் கூறினார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உக்ரைனில் மருத்துவ கல்வி படித்து வரும் மாணவர்களின் எதிர்கால மருத்துவ படிப்பை தொடர்வதற்கு மத்திய அரசு உதவிட வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இவர்களை சேர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

உக்ரைன் – ரஷ்யா போரால் உடனடியாக மீண்டும் உக்ரைனுக்கு சென்று தங்களது மருத்துவ படிப்பை தொடர்வது இயலாத காரியம் என்பதால், அவர்களின் கல்வி பாதிக்காத வகையில்  தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததாக கூறினார். இதனால் நிச்சயம் மத்திய அரசு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறினார்.

இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போரால் தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக மன ஆலோசனை என்பது அவசியமானது. தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 20 மனநல ஆலோசகர்கள் இன்றும், நாளையும் 1,456 மாணவ, மாணவிகளுடன் தொடர்புகொண்டும், அவர்களின் பெற்றோர்களிடமும் பேசி உரிய ஆலோசனை வழங்குவார்கள்.

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் படிப்பை தொடர் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து டெல்லி வரும் மாணவர்கள் சென்னை அழைத்துவரப்படுகிறார்கள். இதுவரை 1,456 மாணவர்கள் உக்ரைனில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்