மாணவர்களே ரெடியா…இன்று முதல் பள்ளிகள் திறப்பு;சனிக்கிழமைகளில் விடுமுறை – இதோ முழு விபரம்!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மாணவர் சேர்க்கை:

மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,11-ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும்,12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

எண்ணும் எழுத்தும் திட்டம்:

CM School Reopen

இதனிடையே,இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு,எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை:

அதே சமயம்,பள்ளிகள் துவங்கும் நேரம்,முடிவடையும் நேரம் எப்போது என்பதை பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளி அமைவிடம்,போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும்,எனினும்,8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

குறிப்பாக,2022-23 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.

தொழிற்கல்வி பாடம் ரத்து:

TN School ,

அதுமட்டுமல்லாமல்,வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி,டெய்லரிங் டிசைனிங் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாகவும்,எனினும்,நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முடித்து 10 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

டிசி இல்லாவிட்டாலும்:

DPI LKG

மேலும்,பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட உடன் தாமதம் இன்றி மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும் என்றும்,குறிப்பாக,5,8, 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றிடிசி வழங்க வேண்டும். அதே சமயம் இதர வகுப்பு மாணவர்கள் டிசி கேட்டாலும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.எட்டாம் வகுப்பு வரை புதிதாக சேர வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லீவ் போடக்கூடாது:

schools reopen

இதனிடையே,2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்:”இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில்,மாணவர்கள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு செல்ல வேண்டும்.விடுப்பு எடுக்கக் கூடாது.பள்ளிகள் திறப்பின்போது முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்திற்கான வகுப்புகள் நடத்தப்படும்.

இன்று காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது.மாறாக,பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டத்தை எப்போது தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

பொதுத்தேர்வு:

மேலும்,2023 மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கும்.
2023 மார்ச் 14ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் தொடங்கும்
2023 ஏப்ரல் 3-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்றும் கூறினார்.

மேலும்,நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment