“இறைவா,என் சகோதரர் ஓபிஎஸ்க்கு,வேதனையைத் தாங்கும் சக்தியைக் கொடு” – ஈபிஎஸ் இரங்கல்….!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவியின் மறைவுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

இதனையடுத்து,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அதன்பின்னர்,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

அதேபோல,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை செலுத்தி,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவிக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,அவர் கூறியிப்பதாவது:

வார்த்தைகளில் விவரிக்க இயலாத துயரம்:

“எனது அன்புக்குரிய அருமைச் சகோதரரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான அண்ணன் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு, வார்த்தைகளில் விவரிக்க இயலாத துயரமும், வேதனையும் அடைகிறேன்.

இறைவா,வேதனையைத் தாங்கும் சக்தியைக் கொடு:

‘அன்பும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற அண்ணன் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இந்த பேரிழப்பை எப்படி தாங்குவார்?’ என்று எண்ணி, எண்ணி கண்ணீர் வடிக்கிறேன். இயன்ற வகைகளில் எல்லாம், எல்லோருக்கும் உதவும் நல் உள்ளம் கொண்ட அன்புச் சகோதாருக்கு இப்படி ஒரு துயரம் நேர்ந்திருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “இறைவா, என் சகோதரர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இந்த வேதனையைத் தாங்கும் சக்தியைக் கொடு” என்று பிரார்த்திக்கிறேன்.

மறைந்த அண்ணியார் திருமதி விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்களை, அவருடைய இல்லத்தில் நான் சந்தித்தபோதெல்லாம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும், உயர்ந்த உள்ளத்துடனும் என்னை உபசரித்ததை நினைத்து, அந்த நல்ல இதயம் நம்மை விட்டுப் பிரிந்ததே என்று வேதனைப்படுகிறேன்.

தைரியம்:

அண்ணன் திருமிகு ஓ. பன்னீர்செல்வம்-திருமதி ப. விஜயலட்சுமி ஆகியோரின் அன்புப் பிள்ளைகளான, தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், கழக நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவருமான திரு. I. ரவீந்திரநாத், M.P.,, திரு. வி.ப. ஜெயபிரதீப் உள்ளிட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அண்ணியார் திருமதி விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்’,என்று தெரிவித்துள்ளார்.