பாசத்திற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்து-ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு!

தீப ஒளித் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும் என்று ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், பாசத்திற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தங்களது உளங்கனிந்த தித்திக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், பாசத்திற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த தித்திக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒளியாய் இருப்பது தெய்வம். தீப வெளிச்சத்தில் தெய்வத்தைக் காண்பதும்,கண்டு தொழுவதும் தொன்றுதொட்டு வருகின்ற மரபு.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கன் தனது கொடுஞ் செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை திருமால் அழித்த தினமே தீபாவளி திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்த நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து, இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளை பரிமாறி உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த தீப ஒளித் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் இந்த தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.