“தொண்டர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும்,என் மீது விழுந்த அடி” – சசிகலா வேதனை !

சென்னை:அதிமுக தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால்தான் வரும் நாட்களில்,எதிரிகளை வெல்ல முடியும் என்பதின் அவசியத்தை உணர்ந்தாகவேண்டும் என்று அதிமுகவினருக்கு சசிகலா அறிவுறுத்தியுள்ளார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில்,நேற்று மாலை 3 மணியுடன் மனுதாக்கல் நிறைவடைந்தது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அதன்பின்னர், இருவரும் போட்டியின்றி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வாகினர்.

இதற்கிடையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஓமபொடி பிரசாத் சிங் மற்றும் ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,எந்த ஒரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள் தான் தேவையே ஒழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல என்றும்,ஓமபொடி பிரசாத் சிங் மற்றும் பி.ராஜேஷ் ஆகியோர் தலைமை அலுவலகத்தில் தக்க்கப்பட்டது வேதனையளிக்கிறது என்றும்,ஒற்றுமையுடன் இருந்தால்தான் எதிரிகளை வெல்ல முடியும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கழகத்தினர் ஒற்றுமையுடன் இருந்தால்தான், எதிரிகளை வெல்லமுடியும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்திருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமை படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. என்றைக்கு நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்றுமுதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவு வேதனை படுகிறது.

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில் அக்கறை காட்டும் போது தான், அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த இயக்கத்தின் மீது ஒரு நல்ல எண்ணமும், நம்பிக்கையும் வரும். எந்த ஒரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள் தான் தேவையே ஒழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.

திரு.ஓமபொடி பிரசாத் சிங் அவர்கள் புரட்சித்தலைவரின் அன்பைப் பெற்றவர். அதுமட்டுமல்ல திரு.பிரசாத் சிங் அவர்கள் தலைவர் கையால் தாலி எடுத்து கொடுத்தால்தான் தனக்கு திருமணம் என்று திருமண மேடையில் வெகுநேரம் காத்திருந்து, பின்னர் தலைவரும் இந்த எளிய தொண்டனின் அன்பால் கட்டுப்பட்டு திருமண மேடைக்கு வந்து தாலி எடுத்து கொடுத்தபின்னர் திருமணம் செய்து கொண்டவர். மேலும், புரட்சித்தலைவர் அவர்கள் கட்சி தொடங்கிய சிறிது காலத்தில் மீண்டும் திமுகவோடு இணைவதற்காக பேச்சுவார்த்தையில் இருந்த வேளையில் திரு. பிரசாத் சிங், திரு.முசிறிப்புத்தன் ஆகியோரை திமுகவினர் தாக்கியதை பார்த்தவுடன், திமுகவுடன் மீண்டும் சேர்வது என்ற முடிவை கைவிட்டு விட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து வழி நடத்தி வெற்றிகண்டார்.

அதே போன்று, எளிய தொண்டரான திரு.பி.ராஜேஷ் அவர்களும் இன்றைக்கு தலைமைக் கழகத்திலேயே தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது, இன்று, நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் கட்டி காத்த இந்த இயக்கத்தை சீரழித்துவிடாதீர்கள். இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது, தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறன். ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில், நம் எதிரிகளை வெல்ல முடியும் என்பதின் அவசியத்தை உணர்ந்தாகவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வாழ்க,புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க”,என்று தெரிவித்துள்ளார்.