தஞ்சாவூரில் டீ கடையில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர்…! அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்…!

தஞ்சாவூரில் திமுகவினர் தகராறில் ஈடுபட்டதை கண்டித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை.

தஞ்சாவூர், சூரக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி  வருகின்றார். அங்கு சென்ற திமுகவினர் தகராறில் ஈடுபட்டதாகவும்,  இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘தடுப்பூசி மையங்களிலும், நியாய விலைக் கடைகளிலும், கொரோனா பணியாளர் நியமனங்களிலும், காவல் துறையிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்த தி.மு.க.வினர், தற்போது தனியாரிடமும் தங்களது அடாவடிச் செயலை மேற்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. இது போன்ற செயல், ஆங்காங்கே சட்டம்-ஒழுங்கை சீரழிக்க வழிவகுக்கும்.

தஞ்சாவூர், சூரக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருவதாகவும், இந்தக் கடைக்கு மன்னார்குடி நகர தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் திரு. சுதாகர். விவசாயத் தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் திரு. பாண்டவர், மாணவரணி நகர துணைச் செயலாளர் திரு. முருகேசன் உள்ளிட்ட எட்டு பேர் சென்ற தகராறில் ஈடுபட்டதாகவும், கடையில் இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசி பலாத்காரம் செய்ததாகவும், இதைத் தட்டிக் கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை, தி.மு.க.வினர் கடுமையாக தாக்கி, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட நான்கு ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயம் அடைந்ததாகவும், இதனையறிந்த கிராம மக்கள் தி.மு.க.வினரை மடக்கி பிடித்து, ‘அவர்களை உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாசு, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து, ஆறு தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், தி.மு.க. நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் சூரக்கோட்டையைச் சேர்ந்த ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்திற்கு மூலக் காரணமான எட்டு தி.மு.க. பிரமுகர்களில், இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டதாகவும், கிராம மக்கள் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதால் காயமுற்ற ஆறு பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தப்பியோடிய இருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆளும் கட்சியில் உள்ளதன் காரணமாக, வழக்கை நீர்த்துப் போகச் செய்து, மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளில் தி.மு.க.வினர் ஈடுபடுவார்களோ என்ற அச்சமும், பதற்றமும் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, சூரக்கோட்டைப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை போக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.