“தவறுக்கு மேல் தவறு செய்யும் அண்ணன் ஓபிஎஸ்;எனக்கு ஜோசியம் தெரியாது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில்,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடம் சென்ற அதிமுக தொண்டர்கள் சிலர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கோஷமிட்டும்,கட்சி பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் தகுதியானவர் அல்ல என்றும்,குறிப்பாக,அம்மா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர் என்றும் முழக்கமிட்டனர்.அப்போது,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அருகே தொண்டர்களில் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.ஆனால்,உடனே அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை மீட்டனர்.

இந்நிலையில்,தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,தருமம் மறுபடியும் வெல்லும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

“மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை,வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இந்த தருணத்தில்,”தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்,” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,ஓபிஎஸ் அவர்கள் தவறுக்கு மேல் தவறு செய்கிறார் என்றும்,பாதை தவறிய கால்,விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர்:
“அதிமுக என்பது ஜனநாயகம் மலர்ந்த மாபெரும் இயக்கம்.இதில் எந்த வித அராஜகப் போக்கும் கிடையாது.அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தவறுக்கு மேல் தவறு செய்கிறார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.”பாதை தவறிய கால்,விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை” அதற்கேற்ப ஒரு தவறான பாதையை நோக்கி தான் அண்ணன் ஓபிஎஸ் சென்றுக் கொண்டிருக்கிறார் என்று மனக் கஷ்டத்துடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.எனவ,பொதுக்குழுவில் அவர் கலந்து கொண்டு பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு ஓபிஎஸ் உட்பட எல்லோரும் கட்டுப்பட்டாக வேண்டும்”,என்று தெரிவித்தார்.

மேலும்,நாளை ஓபிஎஸ் பொதுக்குழுவில் கலந்து கொள்வாரா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார் அவர்கள்:”எனக்கு ஜோசியம் பார்த்து பழக்கமில்லை.இந்த கேள்வியை ஓபிஎஸ் அவர்களிடம் கேளுங்கள்.எங்களைப் பொறுத்தவரை எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது ஒட்டுமொத்த விருப்பம். பொதுக்குழு நாளை நடைபெறுகிறது.அப்போதுதான் பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது தெரியும்”என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment