#BREAKING: தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஆலைக்கு முழுமையாகச் சீல் வைக்கப்படும் – முக ஸ்டாலின்

தமிழக தேவைக்கேற்ப ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேவையின் அளவை புரிந்து மத்திய அரசே வழங்கும் எனவும் தெரிவித்திருந்தது.

ஸ்டெர்லைட்டில் தயாரிக்கும் ஆக்சிஜன் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழக தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பங்கீடு பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் உடனடியாக தமிழக காபந்து அரசின் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

கொரோனா பேரிடர் நேரத்தில் தமிழகத்துக்கு எந்த வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன். ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த வகையான செயல்பாட்டுக்காகவும் அல்ல. திமுக ஆட்சி அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுமையாகச் சீல் வைக்கப்படும் என்ற உறுதியினை அளித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்