#BREAKING: டிச. 9, 13, 14ல் மாநில முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 9, 13, மற்றும் 14 ஆகிய தேதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து கலந்துகொண்டார். இதில், சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கோவையை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டியும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 9, 13, மற்றும் 14 ஆகிய தேதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை வாட்டி வதைத்து வரும் விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

விடியா தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சமூக விரோதிகளின் ஊடுருல், போதைப் பொருட்கள் புழக்கம், திமுக ரவுடிகளின் அராஜகங்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மக்கள் நலன், மக்கள் நலன் என்று சொல்லி ஆட்சிப் பொறுப்பேற்ற விடியா தி.மு.க. அரசு, மக்களை வாட்டி வதைக்கும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தி வருவதன் காரணமாக, மக்கள் மிகுந்த வேதனையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

விடியா தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பிடும் வகையில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அதன்படி, திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9-ஆம் தேதி பேரூராட்சிகளிலும், 13-ஆம் தேதி நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும், டிசம்பர் 14-ஆம் தேதி ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment