அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் – முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என தாராபுரம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்தவர் பிரதமர் மோடி என்றும் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை எல்லாம் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் உழைப்பால் உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கிறது எனவும் புகழ்ந்துள்ளார்.

இந்தியாவை வல்லரசாக்கும் கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி.
நாட்டின் உயர்வுக்காக ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் பாடுபட்டு வருகிறவர் என்றும் கூறியுள்ளார். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி, நாட்டுக்கு நன்மை செய்யக் கூடிய கூட்டணி என்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதால் தான் டையில்லா மின்சாரம் தமிழகத்தில் கிடைக்கிறது. சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ மத்திய பாஜக அரசு காரணம் என கூறிய அவர், நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கனவு திட்டமான அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என பேசியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை மத்திய அரசின் ஆலோசனையுடன் கட்டுப்படுத்தினோம். கொரோனா காலத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ1,000 கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்