Connect with us

“இன்று தான் உங்களின் கடைசி பணி நாள்” – ஓபிஎஸ் கண்டனம்!

அரசியல்

“இன்று தான் உங்களின் கடைசி பணி நாள்” – ஓபிஎஸ் கண்டனம்!

கொரோனா காலத்தில் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதி ஆகிய இரண்டிலிருந்து சுரக்கும் நீரை சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை,தற்போது பணியிலிருந்து விடுவிப்பது கண்டிக்கத்தக்கது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆய்வக உதவியாளர்களை எவ்வித கால அவகாசமும் தராமல்,நவ.30 ஆம் தேதியன்று ‘இன்று தான் உங்களின் கடைசி பணி நாள்’ என்று தெரிவித்து உடனடியாக பணியிலிருந்து விடுவிப்பதும், நான்கு மாதங்களுக்கான ஊதியத்தை தராமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது என்றும்,அவர்களது கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றவும், அவர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,தந்து அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள் என்ற அளவில் ஐந்து ஆண்டுகளில் 50 இலட்சம் வேலைவாய்ப்புகளைத் தமிழக படித்த இளைஞர்களுக்கு வழங்கிட தி.மு.க. தீவிர முயற்சி கொள்ளும்” என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள், அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என்ற வரிசையில் தற்போது கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருக்கிறது.

கொரோனா தொற்று முதல் அலையின்போது, 2020 ஆம் ஆண்டு மூக்கு மற்றும் தொண்டைப் பகுதி ஆகிய இரண்டிலிருந்து சுரக்கும் நீரை சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இளம் வயதினரான ஆய்வக உதவியாளர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து, கொரோனா நோய்த் தொற்று உச்சக் கட்டத்தில் இருந்த காலத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனைக்கான மாதிரியை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது மட்டுமல்லாமல் தரவுகளை பதிவு
செய்தல், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் போன்ற பணிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில், திடீரென்று நவம்பர் 30-ஆம் தேதி சுகாதாரத் துறை துணை இயக்குநர் அவர்கள் ‘இன்று தான் உங்களின் கடைசி பணி நாள்’ என்று தெரிவித்து, டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பணிக்கு வரத் தேவையில்லை என்று ஆய்வக உதவியாளர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும், தங்களுடைய மாத ஊதியம் 8,000 ரூபாய் தான் என்றும், அதைக்கூட நான்கு மாதங்களாக அரசு தரவில்லை என்றும், இதன் காரணமாக தங்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மாற்றம் வரும் என்று நினைத்த தங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது என்றும், வேலை செய்ததற்கான ஊதியம் கிடைக்காததோடு, பணி நீக்கத்திற்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், பணியிலிருந்து விடுவிப்பது குறித்து முன்கூட்டியே தகவல் சொல்லியிருந்தால் வேறு வேலையை தேடிக் கொண்டிருப்போம் என்றும் ஆய்வக உதவியாளர்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதனை எதிர்த்து 150 ஆய்வக உதவியாளர்கள் சென்னையிலுள்ள மருத்துவப் பணிகள் இயக்ககத்தின் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், ஆய்வக உதவியாளர்கள் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் மாதிரிகளை சேகரிப்பதற்காக பணியமர்த்தப்பட்டனர் என்றும், அந்தத் தேவை தற்போது குறைத்துவிட்டது என்றும், தற்போது கணிசமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுவிட்டதால் வீடு வீடாகச் சென்று மாதிரிகளை சேகரிக்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை என்றும், 1,500 ஆய்வக உதவியாளர்களை பணியில் வைத்திருக்க முடியாததற்கும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கும் காரணம் நிதிப் பற்றாக்குறை தான் என்றும் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பினை மத்திய அரசு அறிவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு அவர்களை எவ்வித கால அவகாசமும் தராமல் அவர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிப்பதும், நான்கு மாதங்களுக்கான ஊதியத்தை தராமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, போராடுகின்ற தற்காலிக ஆய்வக உதவியாளர்களை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றவும், அவர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

More in அரசியல்

To Top