பிரதமர் நரேந்திர மோடி அவர்களே நீங்கள் உடற்தகுதி சவாலிலும், யோகா செய்வதிலும் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள்!கொஞ்சம் மூச்சை இழுத்துவிடுங்கள்!பிரகாஷ்ராஜ் கேலி

நடிகர் பிரகாஷ் ராஜ்  டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடியை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரி கடந்த 7 நாட்களாக முதல்வர் கேஜ்ரிவால், அமைச்சர்கள் மணீஷ் ஷிசோடியா, கோபால் ராய், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல்வர் கேஜ்ரிவாலைச் சந்திக்க கர்நாடக, கேரள, ஆந்திரா, மேற்கு வங்க முதல்வர்கள் நேற்று வந்தபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கேஜ்ரிவாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த 4 மாநில முதல்வர்களும் பிரதமர் மோடி தலையிட்டுப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் கிண்டலுடன் கூடிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கூறுகையில், ‘நாட்டின் மிக உயர்ந்த தலைவரே. நீங்கள் உடற்தகுதி சவாலிலும், யோகா, உடற்பயிற்சி செய்வதிலும் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள், ஆழ்ந்து மூச்சு இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களின் அதிகாரிகளிடம் கூறி, ஐஏஎஸ் அதிகாரிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றக் கூறுங்கள். கேஜ்ரிவால்தான் டெல்லியில் மக்களுக்காகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார். நல்ல திட்டங்களையும் தீட்டிச் செயல்படுத்தி வருகிறார். இதை படித்தபின் உங்களின் உடற்பயிற்சியையும், வேலையையும் கூட செய்யலாம்” என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதில் இருந்து, மத்திய அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையான கருத்துகளைக் கூறி விமர்சனம் செய்துவருகிறார். சமீபத்தில் நடந்த கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment