நிபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் எதிலிருந்து பரவுகின்றது?உங்களுக்கு தெரியுமா?இதோ விவரம்

இந்த செய்தி தொகுப்பில் உயிர்க்கொல்லியான நிபா வைரஸ் பரவும் விதம் குறித்து பார்க்கலாம்.

நிபா ((Nipah)) வைரஸ் தாக்குதல் என்பது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று வகையை சேர்ந்ததாகும். பழந்தின்னி வவ்வால்கள் மூலமாகவும், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது. முதன் முதலில் 1998ஆம் ஆண்டில் மலேசியாவில் காம்புங் சுங்காய் நிபா ((Kampung Sungai Nipah)) என்ற ஊரில்தான் இந்த வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் நிபா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டில், வங்கதேசத்தில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம், மரத்தில் கட்டப்படும் கள் பானைகளில் இந்த வைரஸ் பரவி அதன் மூலம் மனிதர்களை தாக்கியுள்ளது. எச்சில், சளி உள்ளிட்டவற்றின் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காற்றின் மூலம் பரவுவதில்லை.நிபா வைரஸ் தாக்கினால் சுவாசக் கோளாறுகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை ஏற்படும்.

கடுமையான காய்ச்சல், தலைவலி, மனக்குழப்பம், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதோடு, நோயாளி கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உண்டு. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து உன்னிப்பாகக் கண்காணித்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும். நிபா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்துகள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை.

வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் நோயை பரப்பக்கூடிய பன்றிகள், வவ்வால்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இதேபோல், மரங்களில் இருந்து விழுந்த பழங்களை உண்ணுவதையும், பதப்படுத்தப்படாத கள்ளை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment