தூத்துக்குடியில் சாலை வசதி கேட்டு வாலிபர் மற்றும் மாதர் சங்கம் சார்பில் நாற்று நடும் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான விட்டிலாபுரம் மணக்கரை சாலை உள்ளது. இந்த சாலை 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்த சாலை வழியாக முத்தாலங்குறிச்சி, இந்திரா நகர், ஆழிகுடி,பொந்தன்பொழி உள்பட பல கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது. முத்தாலங்குறிச்சியில் உள்ள சுமார் 5 செங்கல்தொழில்சாலைக்கு இந்த வழியாகத்தான் தினமும் 100க்கு மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது. தினமும் டவுன் பஸ் 16 சுற்றுகளும், சுமார் 20 க்கு மேற்பட்ட கல்வி வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது.

மேலும் செய்துங்கநல்லூர், விட்டிலாபுரம் ,வி.கோவில் பத்து, நெல்லை மாவட்டம் கூடன்குளம் ஆகிய இடங்களுக்கு குடிநீர்திட்டங்கள் முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் உள்ளது.
கடந்த வருடம் கூடன்குளம் கூட்டுகுடிநீர் திட்டம் அமைக்கும் போது பைப் லைன் அமைக்க விட்டிலாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையை நடுமத்தியில் தோண்டி பைப் லைன் அமைத்தார்கள். அப்போது பொதுமக்கள் கேட்ட போது முறையாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நெடுஞ்சாலை துறைக்கு சாலை அமைக்க பணம் கட்டி விட்டது. எனவே குடிநீர் திட்ட பணி முடிந்தவுடன் நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை அமைக்கும் பணி துவங்கும் என கூறப்பட்டது.
ஆனால் பணி முடிந்து ஓராண்டு முடிந்தும் சாலை அமைக்கப்படவில்லை.
இதனால் இந்த சாலை நீர் தேங்கி குளமாக உள்ளது.

இதனை கண்டித்து கருங்குளம் ஒன்றியம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் விட்டிலாபுரம் சாலையில் நாற்றுநடும் போராட்டம் நடத்தினர்.இப்போராட்டத்தில் மாதர் சங்க மாவட்ட தலைவர் குனேஸ்வரி தலைமை தாங்கினார். ஜனநாயக சங்க ஒன்றிய தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கொம்பையா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி ,ஜனநாயக வாலிபர் சங்கமாவட்ட பொருளாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment