துணை முதலமைச்சர் பதவிக்கு குறி வைக்கும் கர்நாடகா காங்கிரஸ் முக்கிய நிர்வாகி..!

கர்நாடகா துணை முதலமைச்சர் பதவிக்கு குறி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவக்குமார், தமது பணிக்காக மேலிடம் நியாயமான பதவியை வழங்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக வரும் புதன்கிழமை குமாரசாமி பதவியேற்க உள்ளார். இதற்காக, பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையில், அவருடன் துணை முதலமைச்சராக பரமேஸ்வராவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் பதவியும் ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த செய்தியை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார், வரும் புதன்கிழமை குமாரசாமி மட்டுமே முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளதாக தெரிவித்தார். வியாழக்கிழமையே பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளதால், அதன்பிறகு அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள் என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

மேலும், துணை முதலமைச்சராக தாங்கள் பதவி ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கர்நாடக அரசியலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய தாம் செய்த பணிக்காக, மேலிடம் நியாயமான முடிவை எடுத்து, தமக்கு நீதி வழங்கும் என நம்புவதாகவும், அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி தாவாமல் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு எடியூரப்பா அரசு கவிழ காரணமானவர் டி.கே.சிவக்குமார் என்று கூறப்படுகிறது. இதற்கு பரிசாக அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழஙகப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், துணை முதலமைச்சர் பதவிக்கு மறைமுகமாக விருப்பம் தெரிவித்து டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment