எப்போதையும்விட இப்போதுதான் காந்தி அதிகம் தேவைப்படுகிறார்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்கும் துணிச்சல் அதிமுகவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக அரசு அழுத்தம் தர வேண்டும் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமையாது என குறிப்பிட்ட அவர், காவிரி டெல்டாவை அழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்த வைகோ, இதை சொல்வதற்காக நீதிமன்ற அவமதிப்பை வழக்கை சந்திக்கவும் தயார் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது, காந்தி தற்போதுதான் நாட்டுக்கு மிகவும் தேவைப்படுவதாகவும், தலித் மக்களின் உயர்வுக்காக பாடுபட்டவர் காந்தி என்றும், தலித்களுக்கு எதிராவனர் காந்தி என்று கூறுவது தவறானது என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  சாவர்க்கர் படம் திறக்கப்பட்டபோது தான் மனதிற்குள் வெம்பியதாகவும், காந்தியை கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க வேண்டும் என்கின்றனர் என்றும் வைகோ குறிப்பிட்டார். நேருக்கு பதிலாக வல்லபாய் பட்டேல் பிரதமராகியிருக்க வேண்டும் என்று பிரதமர் கூறியது பொறுப்பற்ற பேச்சு என்றும், காங்கிரசிலிருந்து நேதாஜி வெளியேற காரணமாக இருந்தவர் வல்லபாய் பட்டேல் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மிகப்பெரிய சூத்திரதாரி என்றும், அவர் பதவி வெறியில் இருப்பதாகவும் வைகோ கடுமையாக விமர்சித்தார். உத்தரபிரதேச தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க மக்களிடையே பாஜக பிளவை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

சிறுபான்மையினர் வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும், அமைதியாக இருக்கும் தமிழகத்திலும் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும், சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டியது பெரும்பான்மையினரின் கடமை என்றும் அவர் கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் இருப்பதால்தான் சிலர் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பதில்லை என்றும் வைகோ கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment