உரிமையை நிலைநாட்ட ஆயுள் முழுவதும் சிறைசெல்ல தயாராகும் மு.க.ஸ்டாலின்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, ஆயுள் முழுவதும் சிறைசெல்லக்கூட தாம் தயாராக இருப்பதாக,  தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்புவில் இருந்து சனிக்கிழமை தொடங்கினார். இரண்டாவது நாளான நேற்று, தஞ்சாவூர் சில்லத்தூரில் அவர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். காவிரிக்காக போராடிய தங்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டது குறித்து அஞ்சவில்லை என்றும், காவிரிக்காகப் போராடி ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் கவலைப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, கறுப்புக் கொடி காட்டுவது உறுதி எனத் தெரிவித்த அவர், அன்றைய தினம் தமிழக மக்கள் கறுப்பு உடை அணிந்தும், வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியும் எதிர்ப்பைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, குடியரசு தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இன்று காலை அன்னப்பன்பேட்டையில் பயணத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின், மெலட்டூர், திருக்கருக்காவூர், சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அம்மாபேட்டை, அமராவதி, வெட்டாற்றுபாலம் வழியாக நீடாமங்கலத்தை சென்றடைகிறார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment