நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய ஹெச்.ராஜா ..!குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

  • பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசினார்.
  • இது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்றார் .அப்பொழுது அவர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறை குறித்தும் இழிவான சொற்களில் விமர்சனம் செய்தார்.இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதனால் திருமயம் போலீசார்  நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பாக துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குற்றப்பத்திரிகையை திருமயம் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.