‘வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது’ – ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? – சு.வெங்கடேசன் எம்.பி

ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவில் சம்ஸ்கிருத வார்த்தை இருப்பதாகவும், ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? என்றும் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘ ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் சிட்டிசன், டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும்.

திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாம். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது. அதிகாரிகளின் விசுவாசமோ என்னவோ ஐ.ஆர்.சி.டி.சி முன் பதிவில் அதை சொருகி விட்டார்கள். இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் 14135 பேர்தான். தமிழ் 8 கோடி பேரின் தாய் மொழி. ஒன்றிய அரசும், அதன் அதிகாரிகளும் நினைத்தால் 14000 பேரின் தாய் மொழியை புரிகிறதா புரியாதா என்று கூட யோசிக்காமல் திணிக்க முடியும். ஆனால் இவ்வளவு தொழில் நுட்ப மேம்பாடு இருந்தாலும் 8 கோடி பேரின் தாய் மொழியை முன் பதிவுக்கான தெரிவு மொழியில் இணைக்க முடியாது.

ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள். வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது. நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.