தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரை துடைப்போம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு ஓபிஎஸ் , ஈபிஎஸ் அறிக்கை.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘தமிழ் நாடு முற்றிலும் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. பருவ மழையின் தொடக்கத்திலேயே தலைநகர் சென்னை மட்டுமின்றி, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

கொரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டு காலமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வருமானம் குறைந்து, அன்றாட வாழ்வே சுமையாகிப்போன நம் மக்கள், இந்தப் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, கண்ணீர் கடலில் மூழ்கி இருப்பதைப் பார்க்கையில் நெஞ்சம் பதறுகிறது. இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சி என்றால் “இந்த மக்களுக்காக எப்படியெல்லாம் ஓடோடி உழைத்திருப்பார்; உள்ளதையெல்லாம் அள்ளிக் கொடுத்திருப்பார் என்று உள்ளம் எங்குகிறது.

ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்காமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் பாட்சித் தலைவரின் தம்பிகளாக; புரட்சித் தலைவியின் பிள்ளைகளாக, உடனடியாகக் களத்தில் இறங்கி மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பணிகளில் ஒவ்வொரு தொண்டரும் ஈடுபட வேண்டிய நேரம் இது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்ற பழமொழிக்கு ஏற்ப நிர்வாகத் திறமையும், தொண்டு செய்யும் தூய உள்ளமும், துணை நிற்கும் துணிவும் இருந்தால்தானே இன்றைய ஆட்சியாளர்கள் மக்களுக்காக உழைத்திருப்பார்கள்.!

கழக உடன்பிறப்புகள் உடனடியாக மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைந்துச் செல்ல உதவுங்கள். மக்கள் அனைவருக்கும் வயிராற உணவு கிடைத்திட ஏற்பாடு செய்யுங்கள்.

எங்கெல்லாம் மருத்துவ வசதிகள் தேவையோ அங்கெல்லாம் கழக மருத்துவர்கள் முகாம் அமைத்துப் பணியாற்றுங்கள். படுத்த படுக்கையாய் இருக்கும் முதியவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும் பரிவுடன் உதவுங்கள். எங்கெங்கு வெள்ள அபாயம் இருக்கிறது என்பதை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்கள் வழியாக எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். பாதுகாப்பு தேவைப்படும் முதியோருக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு கவனத்துடன் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். சுருக்கமாகச் சொன்னால் எல்லோருக்கும், எல்லாமுமாக இருந்து, நாம் மக்கள் நலன் காக்கும் கழகத்தின் மாவீரர்கள் என்பதை உலகுக்குக் காட்டுங்கள்.

மக்கள் தொண்டாற்றுவதில் மற்றவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களாக இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் ஓடி, ஓடி உழைப்போம்; ஊருக்கெல்லாம் கொடுப்போம். நம்மிடம் வசதி வாய்ப்புகள் குறைவென்றாலும், இருப்பதைப் பகிர்வோம். இதற்குமுன் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம், சுனாமி, புயல், கொரோனா பேரிடர் போன்ற காலக்கட்டங்களில் ஆங்காங்கே கழகத்தினரே எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அம்மா உணவகங்கள், சமூக உணவுக் கூடங்கள் வழியாக பசிப் பிணி போக்கிய பயிற்சி நமக்கு இருக்கிறது.

மக்கள் பணி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, மக்களின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, பால், உடை, மருத்துவ வசதி, மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களுக்கு உழைப்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளே முன்கள வீரர்கள்; தன்னலம் கருதாத தியாகச் செம்மல்கள் என்ற வீர வரலாறு நம் பொதுவாழ்வுக்கு உண்டு. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

“பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும்போதும் இன்பம்” என்ற புரட்சித் தலைவரின் பாடல் நம் பணிகளுக்கு இலக்கணமாகட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.