கறுப்புக்கொடி ஏற்றுவோம் , கண்டன முழக்கம் எழுப்புவோம் -மு.க. ஸ்டாலின்

“கறுப்புக் கொடி ஏற்றுவோம்,கண்டன முழக்கம் எழுப்புவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தலைமை  அறிவிப்பு வெளியிட்டது.திமுகவினர் தங்கள் வீடுகள் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  எழுதியுள்ள கடிதத்தில் ,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
கொரோனா பரவலை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி, சிகிச்சை அளித்து மக்களைக் காப்பாற்றும் திறனும் செயலும் அற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நோய்த் தொற்று பரவிப் பாதிப்பு ஏற்படக் காரணமானதுடன், தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமையையும் உருக்குலைத்துப் பாழ்படுத்திவிட்டது. 100 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கு – அந்த ஊரடங்குக்குள் ஊரடங்கு – முழு ஊரடங்கு – அரைவேக்காடு ஊரடங்கு – டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் – என அடுத்தடுத்து புதுப்புதுக் குழப்பத்துடன் எடுக்கும் அரைகுறை முடிவுகளால் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை ஆளும் அதிகாரத்தில் அ.தி.மு.க. இருந்தாலும், மக்களின் மனதில் நம்பிக்கைக்குரிய இயக்கமாக இருப்பது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதனால், மக்கள் பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் முதல் குரல், தி.மு.கழகத்திடமிருந்தே வெளிப்படுகிறது; தீர்வுக்கான வழிமுறைகளையும் முன்வைக்கிறோம். அதனைச் செவிமடுக்கும் அரசியல் பக்குவமின்றி, மிச்சமிருக்கும் பதவிக்காலத்தில் சொச்சமிருக்கும் கஜானா இருப்பை எப்படி கரைத்துச் சுரண்டிக் கொழுக்கலாம் என்பது மட்டுமே இந்தக் கொரோனா கொடுங்காலத்திலும் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒற்றைக் கொள்கையாக இருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்களுக்கும் அபராதம் விதிப்பு – வாகனங்கள் பறிப்பு எனத் தண்டனை வழங்கி வரும் அ.தி.மு.க .அரசு, வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களிடம், மின்சாரத்தை கூடுதலாகப் பயன்படுத்தியதாகப் பல மடங்கு கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடு முழுவதும் மின்சார ‘ஷாக்’கைவிட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மின்சாரக் கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட குளறுபடிகள் – அவற்றைப் பகுப்பதில் ஏற்பட்ட கோளாறுகள் எல்லாமும் சேர்ந்து மக்கள் மீது அதிக சுமையை ஏற்றியிருப்பதைத் தனது சொந்த அனுபவத்தின் வாயிலாகப் பல துறை சார்ந்த பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். பிரபலங்கள் முதல் சாதாரண சாமானியர்கள் வரை பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்த மின்கட்டணக் கொள்ளையைப் பிடிவாதமாக நியாயப்படுத்தும் அ.தி.மு.க. அரசு, பழி முழுவதையும் மின்நுகர்வோரான மக்கள் மீதே சுமத்துகிறது.

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஜூலை 21-ம் நாள் நடத்துகின்ற கறுப்புக்கொடி அறப்போரில், கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதுடன், பொதுமக்களிடமும் அதற்கான ஆதரவைத் திரட்டும் வகையில் துண்டறிக்கைகளை வழங்கிட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி பறந்திடும் வகையில் மக்களின் பங்கேற்பு அமைந்திட வேண்டும்.

போராட்டத்தின் நோக்கம் – அதில் எழுப்பப்பட வேண்டிய முழக்கங்கள் ஆகியவை ஒவ்வொரு மாவட்டக் கழகத்திற்கும் தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா கால ஊரடங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தனி மனித இடைவெளியுடனும் முகக்கவசம் – சானிடைசர் போன்ற பாதுகாப்பு வசதிகளுடனும் பொதுமக்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் அறப்போரில், அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கும் வகையில், இல்லங்கள் தோறும் கறுப்புக்கொடிகள் பறக்கட்டும்! அனைத்துத் திசைகளிலும் கண்டன முழக்கங்கள் அதிரட்டும் என்று தெரிவித்துள்ளார்.