எங்களுக்கே ஆக்ஸிஜன் தேவை அதிகம் உள்ளது, பிற மாநிலங்களுக்கு கொடுக்க முடியாது- கேரள முதல்வர்!

கேரள மாநிலத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகம் உள்ளதால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பது சாத்தியமற்றது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட, தற்போதெல்லாம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்படுகிறது.

தற்போது கேரளாவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே 15 ஆம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 6 லட்சமாக அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஏற்கனவே தங்களிடம் இருந்த 450 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கியதால், தற்பொழுது தங்களிடம் 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளதாகவும், இனி தங்களால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மே 15 -க்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இனி வரும் நாட்களில் மாநிலத்துக்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால் கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 219 டன் ஆக்சிஜனையும் தங்கள் மாநிலத்துக்கே உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal