Election2024 : பிரதமர் மோடியை இனி மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்தார்.
மக்காவை தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளன. ஏற்கனவே கோவையில் வெப்பம் அதிகரித்துள்ளது, போட்டி திமுக அதிமுகவுக்கு தான், நான் கல்லை காட்டுகிறேன், அவர் பல்லை காட்டுகிறார் என அரசியல் பிரச்சார மேடைகள் பரபரப்பாகி வருகின்றன.
நேற்று திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதனை மேற்கோள்காட்டி, ஆமாம் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது உண்மை தான். உங்களை வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப்போவதில்லை என கூறிய உதயநிதி, இனி நாம் பிரதமர் மோடியை அனைவரும் மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும் என தேர்தல் பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டார்.
நாம் (தமிழக மக்கள்) மத்திய அரசுக்கு 1 ரூபாய் வரி கொடுத்தால் , அவர்கள் தமிழகத்திற்கு வெறும் 29 பைசா தான் திருப்பி தருகிறார்கள் அதனால் பிரதமரை 29 பைசா என அழைக்க உள்ளோம் என திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார்.