இதற்காகவா தமிழக மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள்..? – சசிகலா

திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து சசிகலா அறிக்கை.

உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சசிகலா அவர்கள் திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘திமுக அரசு ஆவின் பொருட்களுக்கு விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது, ஒவ்வொரு நாளும் திமுக அரசு தாங்கமுடியாத சுமைகளை தமிழக மக்கள் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருக்கிறது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

திமுக அரசு கடந்த மார்ச் மாதம் தான் நெய், பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியிருந்தது. அதாவது, ஆவின் நெய் லிட்டருக்கு 30 ரூபாய் வரையிலும், பால் பவுடர் 1 கிலோ 40 ரூபாய், பாதாம் பால் பவுடர் 1 கிலோ 100 ரூபாய், தயிர் லிட்டருக்கு 6 ரூபாய் என்ற அளவுக்கு கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது நெய் விட்டருக்கு 45 ரூபாய். தயிர் லிட்டருக்கு 10 முதல் 20 ரூபாய் வரையிலும், லஸ்ஸி 200 மி.லி. 2 முதல் 3 ரூபாய் வரையிலும் மீண்டும் உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளால் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், அவர்களின் விற்பனையை அதிகரிக்கவும் தமிழக அரசே உதவுவதாக அமைந்துவிடும். இதற்காகவா தமிழக மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுகிறது; அதேபோன்று மத்திய அரசும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment