தேசிய கட்சி என்று ஒன்று இல்லவே இல்லை.! சேலத்தில் சீமான் பேட்டி!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்தார். அதில், பாஜக, காங்கிரஸ், காவிரி விவகாரம் , நீட் தேர்வு முதல் லியோ பட ரிலீஸ் பிரச்சனை வரை  தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார் சீமான்.

தேசிய கட்சிகள் பற்றி கேட்கப்பட்ட போது, இந்தியாவில் தேசிய கட்சி என்று ஒன்று இல்லவே இல்லை. தேசிய கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகளே மாநில அளவில் ஒரு கொள்கையை வைத்து தான் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் ஐபிஎஸ் பணியாற்றிய அண்ணாமலை கர்நாடகாவில் பாஜக மாநில தலைவராக முடியாது.

அரசு இயந்திரமா..? செய்தி தொடர்பு நிறுவனமா..? – அண்ணாமலை 

அதே போல, தமிழக மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியை கர்நாடகா மாநில முதல்வராக மாற்ற முடியுமா.? ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே நிலைப்பாடு என்றால் இப்படித்தானே இருக்க வேண்டும் என விமர்சித்தார். தமிழக விவகாரங்களில் இன்னும் முதல்வர் கடிதம் தான் எழுதுகிறார் எனவும் சீமான் விமர்சனம் செய்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, காவிரி நீரை தர மறுக்கிறார்கள். அவர்களோடு, தமிழகத்தில் குறைந்தபட்சம் கூட்டணியைவாது முறித்துக்கொள்ளுங்களேன் என விமர்சனம் செய்து இருந்தார். அடுத்து நீட் தேர்வு பற்றி பேசுகையில், நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று . நீட் தேர்வு வெற்றி பெற்று கல்லூரிக்கு சென்றால் அங்கு நீட் தேர்வு எழுதாத பேராசிரியர்கள் தான் படம் நடத்த உள்ளனர். நீட்டிற்கு முன்னர் உள்ள பாடத்திட்டம் தான் இருக்கிறது எனவும் , குறைந்தபட்சம் தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு அறிவித்தது போல நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தெலுங்கானா மாணவர்கள் தான் தெலுங்கானா மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்றது போல தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டார்.

அடுத்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள லியோ படம் பற்றி பேசுகையில், விஜயின் முந்தைய படத்திற்கு இது போல பிரச்சனை வந்ததில்லை, ஜெயிலர் படத்திற்கு வரவில்லை. லியோவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திடம் வெளியீட்டுக்கு கொடுத்தால் இசைவெளியீட்டு விழா நடந்திருக்கும். பிரச்சனை இல்லாமல் படம் ரிலீசாகி இருக்கும்.

விஜய் கட்சி ஆரம்பிக்க போகிறார். அரசியலில் இறங்க உள்ளார் என்கிற பயம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் எனவும் சீமான் இன்று சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.