இன்று முதல் 50% வாடிக்கையாளர்களுடன் ஆந்திராவில் தியேட்டர்கள் திறப்பு…!

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் இன்று 50% வாடிக்கையாளர்களுடன் திறக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது.

ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்குக்கு வந்தால் மிகுந்த நஷ்டம் ஏற்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் ஜூலை 8-ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தற்போது மீண்டும் இன்று முதல் ஆந்திர மாநிலம் முழுவதிலும் சி சென்டர்களில் உள்ள தியேட்டர்கள் இயங்குவதற்கு ஆந்திர  அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும், திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆந்திர அரசு வலியுறுத்தியுள்ளது .

author avatar
Rebekal