33 மாதங்கள்.. திராவிட அரசின் திட்டங்கள்… நீண்ட பட்டியலை கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கடந்த திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்திற்காக தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆரம்பித்தன. அதில் தமிழக அரசு அளித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி அதனை புறக்கணித்து, சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். மேலும் ஆளுநர் பேசியது சட்டப்பேரவை குறிப்பில் இடம்பெறாது என்றும், அரசு கொடுத்த உரைதான் சட்டப்பேரவை நிகழ்வில் பதியப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதனை அடுத்து, நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் இடம்பெற்று இருந்தது. அதில் உறுப்பினர்கள் தங்கள் தொகுதி கோரிக்கைகள் குறித்த கேள்விகள் கேட்டனர். அதற்கு அந்த துறை அமைச்சர்கள் தங்கள் பதில்களை அளித்தனர். மேலும், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல், மக்களவை தொகுதி மறுசீராய்வுக்கு எதிராக இரண்டு தனி தீர்மானங்களை கொண்டு வந்தார். அந்த தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் பதிலுரை :

இதனை அடுத்து இன்று ஆளுநர் உரைக்கு பதிலுரை நிகழ்வைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நிகழ்த்தினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், முதலில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பழமொழி கூறினார்கள். தற்போது, தெற்கு வளர்கிறது. அது வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது என்று மாறும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு கொள்கையை வளர செய்ய முடியும் என நிரூபித்தவர் அறிஞர் அண்ணா. எல்லோருக்கும், எல்லாம் என்ற அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியவர்கள் அண்ணா மற்றும் கலைஞர்.

அவமானப்படுத்திவிட்டார் 

அரசு கொடுக்கும் உரையை படிக்க வேண்டியது ஆளுநர் அவர்களின் கடமை. ஆனால், ஆளுநர் ரவி இந்த சபையை தவறாக பயன்படுத்தி விட்டார் என்று தோன்றும் அளவுக்கு அவர் நடந்து கொண்டார். இது சட்டசபையை அவமானப்படுத்தும் செயல். அவர் தான் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணம் உறுதிமொழிக்கு எதிராக நடந்து கொண்டார். பாசிச முதலாளித்துவ அதிகாரங்களுக்கு எதிராக போராடும் நாங்கள் இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுகளை பார்த்து பயப்பட போவதில்லை.

33 முன்னேற்ற மாதங்கள் : 

அறிஞர் அண்ணா, கலைஞர் கூறியபடி , உழைப்பு, உழைப்பு, உழைப்பின் காரணமாகவே தற்போது தமிழகத்தை செயல்படுத்தி முன்னுதாரணமான ஒரு மாநிலமாக மாற்றி வருகிறோம். திமுக பொறுப்பேற்ற 33 மாதங்கள் முன்னேற்ற மாதங்களாகவே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

  • இந்தியா பொருளாதாரத்தில் 9% தமிழக பொருளாதாரம்.
  • இந்தியாவின் ஜிடிபி அளவு தரவரிசையில் தமிழகம் இரண்டாவது இடம்.
  • இந்தியாவின் வளர்ச்சி 7.24 சதவீதம் என்றால் அதில் தமிழகத்தின் வளர்ச்சி 8.19 சதவீதம் வளர்ச்சி.
  • இந்தியாவின் பணவீக்கம் 6.6 சதவீதம் என்றால் தமிழகத்தின் பணவீக்கம் 5.9 சதவீதம் மட்டுமே.
  • மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்.
  • தொழில் முதலீட்டாளர்களின் விருப்ப பட்டியலில் தமிழக முதலிடம்.
  • கல்வியில் இரண்டாம் இடம்.
  • புத்தாக்க திட்டத்தின் கீழ் தமிழகம் 9வது இடம்.
  • இளைஞர்கள், பெரியவர்கள், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள் ஓடுக்கப்பட்டோர் அவர்களின் வாழ்க்கை தரம் தற்போது உயர்ந்துள்ளது

என நாங்கள் பல்வேறு சாதனைகளையும் இந்த அவையில் கூறுவோம்.

சாதனைகள் :

இந்தியாவின் தென்மூலையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அங்கு திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறார்கள், அந்த திட்டங்கள் குறித்து மற்ற மாநில அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து திட்டசெயல்பாடுகளை கண்காணிப்பது தமிழகத்தின் சரித்திர சாதனை.

இதற்கெல்லாம் மகுடம் வைக்கும் விதமாக ஒரு சாதனை இருக்கிறது. அதாவது தமிழகம் அனைத்து விதத்திலும் வளர்ந்து வருவதை கண்டு நமது விரோதிகளுக்கு பொறாமை வருகிறது அதுதான் மிகப்பெரிய சாதனை.

  • மாதந்தோறும் 1.15 கோடி மகளிருக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
  • விடியல் பேருந்து சேவை மூலம் இதுவரை 445 கோடி கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
  • காலை உணவு திட்டம் மூலம் 16 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள்.
  • 13.12 லட்சம் மக்கள் நகை கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர்.
  • ஒரு லட்சம் பேர் கூட்டுறவு கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர்.
  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பயன்பெற்றுள்ளனர்.
  • இல்லம் தேடி கல்வி மூலம் 24 லட்சம் மாணவர்கள் தற்போது வரை பயன்பட்டு உள்ளனர்.
  • இலவச மின் இணைப்பை 2 லட்சம் உழவர்கள் பெற்றுள்ளனர்.
  • ஓய்வூதியம் உயர்வு தொகை திட்டம் மூலம் 30 லட்சம் பயனர்கள் பயன்பெற்றுள்ளனர்.
  • கலைஞரின் வேளாண் திட்ட மூலம் 42.33 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
  • மீன்பிடி உதவி தொகையை 4.85 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.
  • மின்பிடி காலம் அல்லாமல் உதவித்தொகை 5.14 லட்சம் பேர் பயன்பட்டுள்ளனர்.
  • முதலமைச்சர் முகவரித் திட்டத்தின் கீழ் 19.60 லட்சம் பயனர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 45 லட்சம் மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • 33 மாதங்களில் பல்வேறு இடங்களில் 6,654 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு உதவி தொகை திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

பத்திரிக்கை பாராட்டுக்கள் :

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது தான் திராவிட மாடல் அரசு. இப்படி செயல்பட்டதன் காரணமாக தான் தமிழக தொழில் வளர்ச்சியு பற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் பதிவிடப்பட்டுள்ளது, வெள்ள நிவாரண பணிகளை சிறப்பாக கையாண்டதாக தி ஹிந்து நாளிதழ் கூறியது இவ்வாறு பல்வேறு பத்திரிகைகளின் தமிழக அரசை பாராட்டி எழுதியுள்ளனர்.

இப்படியான சூழலில் இரண்டு இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசு இதுவரை உரிய நிவாரணத்தை தரவில்லை. மேலும், ஜிஎஸ்டி வரி பகிர்வு தொகையை நிறுத்தியதன் காரணமாக ஆண்டுக்கு மட்டும் 20,000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு இழப்பை ஏற்பட்டு உள்ளது. மதுரை எய்ம்ஸ் பற்றி நான் கூற தேவையில்லை.

பிரதமர் சந்திப்பு :

நான் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் தமிழக மெட்ரோவிற்கு நிதியை முழுமையாக தருமாறு கேட்டு வருகிறேன். எதிர்க்கட்சி தலைவரிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், நீங்களும் எங்களுடன் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்.

முக்கிய அறிவிப்பு :

தற்போது கூட்டத்தொடரில் நான் தெரிவித்துக் கொள்ளும் முக்கிய அறிவிப்பு  என்னவென்றால், 2001 ஆம் ஆண்டு அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 2.5 லட்சம் வீடுகள் தற்போது 2,000 கோடி ரூபாய் செலவீட்டில்  பூனரமைத்து தரப்படும் என அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதனை அடுத்து முதல்வர் கூறிய பதிலுறை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment