வருகின்ற ஜன.17 ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வருகின்ற ஜன.17 ஆம் தேதி தமிழக எம்.பி.க்கள் சந்திக்கவுள்ளனர்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு,ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது.ஆனால்,இந்த மசோதாவை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பாததால்,நீட் விலக்கு மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,எம்பி டிஆர் பாலு உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் குழு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மூன்று முறை சந்திக்க முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து,சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் முதல்வர் தலைமையில் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து கட்சியினரும் தங்களது ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்,மத்திய அமைச்சர் அமித்ஷாவை வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி எம்பி டிஆர் பாலு உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக வலியுறுத்த உள்ளனர் என்று கூறப்படுகிறது.