கீவ்-வை நெருங்கிய ரஷ்ய படைகள் – 64 கி.மீ. நீளத்திற்கு அணிவகுத்து நிற்கும் ராணுவ வாகனங்கள்!

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள்  முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியானது.

இதனையடுத்து,உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது.மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் தொடர்பாக மேலும் சில மணி நேரங்கள் கியூ, கார்கிவ், செர்னிவ், மரியூபோல், சுமி ஆகிய நககரங்களில் போர் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

எனினும்,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா விமானங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அரசு எச்சரித்தது. மேலும்,மக்கள் பாதுகாப்பான நிலவறைக்குள் சென்று பதுங்கி கொள்ளுமாறும் உக்ரைன் அரசு அறிவுறுத்தியிருந்தது.அதே சமயம், விமான தாக்குதல் குறித்து முன் கூட்டியே எச்சரிக்கும் வகையில் தலைநகர் கீவில் சைரனும் ஒலிக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் மட்டுமல்லாமல்,பல்வேறு முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாகவும்,அது தவிர விமான தளங்கள்,துறைமுகங்கள் ஆகியவற்றை தாக்குவதற்கு ஏற்ற வகையில் அப்பகுதிகளை சுற்றி ரஷ்யா தனது படைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷ்ய படைகளின் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்பதை மாக்ஸர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்த செயற்கைக்கோள் படங்கள் உறுதிபடுத்துகின்றன.

இதனிடையே,உக்ரைன்,மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.