கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில்,கடந்த 6ம் தேதி 3 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது, கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் பிரதமர் மோடியின் சித்தாந்தத்தையும், தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய, எந்த தலைவர்களாக இருந்தாலும் பாஜகவில் இணையலாம். இணைந்த அனைத்து தலைவர்களும் தேசியம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ளனர்.

ஒரு அரசியல் கட்சியில் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. அது நடக்கட்டும் பதில் கூறுகிறேன் என தெரிவித்தார். அரசியலில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது. பாஜகவில் யாரு வந்தாலும் மகிழ்ச்சிதான். முக்கியமாக பாஜகவின் சித்தாந்த அடிப்படையில் வரவேண்டும் என கூறினார்.

இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென இன்று விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்றுள்ள ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்