இன்றுடன் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ..!

டோக்கியோவில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாக 32-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.குறிப்பாக,இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பதக்கம் வென்ற இந்தியா:

ஒலிம்பிக்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.அதன்படி, பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும்,பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலமும்,குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா வெண்கலமும்,41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப்பதக்கமும், மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தஹியா வெள்ளியும்,பஜ்ரங் புனியா வெண்கலமும் பெற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து,ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கம் கூட இந்தியா பெறவில்லை என்ற ஏக்கம் அனைவரின் மனதிலும் எழ,அதனை போக்கும் வகையில்,ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சுதந்திர இந்தியாவின் முதல் தங்கப்பதக்கதை வென்று சாதனை புரிந்தார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம்,2 வெள்ளி,4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்றுள்ளது.

முடிவு:

இதற்கிடையில்,மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி பின்னர் மீண்டு எழுந்து,அரையிறுதியை நோக்கி சென்று போராடி தோற்றது.அதேபோல நேற்று கோல்ஃப் போட்டியில் அதிதி அசோக் மிக குறைந்த புள்ளியில் தோற்றார்.இதனையடுத்து,ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது.

கடைசி தங்கம்:

கடைசி நாளான இன்று பெண்கள் வாலிபால், ஆண்கள் வாட்டர் போலோ, ஆண்கள் மராத்தான் உள்ளிட்ட 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறியது.அதன்படி,டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வாட்டர் போலோவில் கிரீஸை வீழ்த்தி செர்பியா ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை வென்றது.

நிறைவு விழா:

இவ்வாறு,கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு போட்டிகள் மூலம் அனைவரின் இதயத்தை நெகிழ வைத்த,ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஜப்பானின் டோக்கியோவில் நிறைவடைகின்றன.

போட்டிகள் முடிந்த நிலையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா டோக்கியோ நேரப்படி இரவு 8.00 மணிக்கு நடைபெறும். நிறைவு விழா அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ள இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா தலைமை தாங்கி இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.
போட்டி நிறைவு விழா முடிவில் அடுத்ததாக 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படும்.
பதக்க பட்டியல்:
தற்போதைய,பதக்க பட்டியலில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது.சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கப்பதக்கங்களுடன் 3 வது இடத்தில் உள்ளது.இந்தியா 1 தங்கம் உட்பட 7பதக்கத்துடன் 48 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.