#SAvsIND: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? 288 ரன்கள் வெற்றி இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 288 ரன்கள் இலக்கு.

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரர்களான குயின்டன் டி காக், ஜனனிமான் மாலன் களம் கண்டனர். மாலன் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேற, இதன்பின் களமிறங்கிய கேப்டன் தேம்பா பாவுமா ரன் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் வந்த ஐடன் மார்க்ராம் விக்கெட்டை இழக்க, மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த குயின்டன் டி காக் 31-வது ஓவரிலேயே 110 பந்துகளில் 102 ரன்கள் அடித்து தனது சத்தத்தை பூர்த்தி செய்தார். இதன்பின்னர் நிதானமாக விளையாட்டை வெளிப்படுத்தி வந்த குயின்டன் டி காக் 130 பந்துகளில் 124 ரன்கள் அடித்து பும்ரா பந்தில் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து, ரஸ்ஸி வான் டெர் டுசென் 52 ரன்கள் எடுத்து வெளியேற, டேவிட் மில்லர் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த தென்னாபிரிக்கா அணி வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதியாக 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 287 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தளவில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை மற்றும் தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்த நிலையில், 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. ஏற்கனேவே. மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கும் தென்னாபிரிக்கா அணியை இப்போட்டியில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்