“சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்;இபிஎஸ் பலவீனமாகவுள்ளார்” – டிடிவி தினகரன்!

ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக கட்சியை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மூன்று நாட்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி அராஜகம் செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று,இது உலகம் அறிந்த வெளிச்சம்.இதை நான் சொல்லிதான் தெரியனுமா?,இப்போது இதை நான் கூறினால் தேர்தலில் தோல்வியுற்றதால் கூறினேன் என்பீர்கள்,’வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் வையகம்'”,என்று கூறினார்.

மேலும்,செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,”ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக கட்சியை மீட்டெடுப்போம். அதுவரை நாங்கள் காத்திருக்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,சசிகலா அவர்களுடைய  ஆதரவு அமமுகவுக்கு உள்ளதா? அமமுக என்ற வார்த்தையை அவர் இதுவரை பயன்படுத்தியது இல்லையே? என்று செய்தியாளர் கேட்டதற்கு,”சசிகலா அவர்கள் முதலில் எனது சித்தி,அதன்பிறகுதான் அரசியல் எல்லாம்.அந்த உறவு எப்போதும் நன்றாகவே உள்ளது.மேலும்,சசிகலா அவர்களுடைய ஆதரவு அமமுகவுக்கு எப்போதும் உள்ளது.எனினும்,அவர் அதிமுக பொதுச்செயலாளர் அவர் எப்படி அமமுக பற்றி பேசுவார்கள்.அதேபோல,அவர் அதிமுக கொடியை என்னை பிடிக்க சொல்ல முடியுமா?, எனது பாதை வேறு,அவருடைய பாதை வேறு ,ஆனால் எங்களது இலக்கு ஒன்றுதான்”,என்றார்

மேலும்,சசிகலா அவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆனால்,எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று செய்தியாளர் கேட்டதற்கு டிடிவி தினகரன் கூறுகையில்:”ஓபிஎஸ் அவர்கள் நிதானமாக சிந்தித்து பேசக்கூடியவர்,அவர் கருத்து சொன்னாள் சரியாக இருக்கும்.ஆனால்,எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பலவீனமாக உள்ளார்; பதற்றத்தில் சசிகலா குறித்து அவதூறாக பேசுகிறார்,தற்போது அவரிடம் தடுமாற்றம்,பயம் இருக்கிறது”,என்றும் கூறியுள்ளார்.