#Breaking:உக்ரைனில் போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைன் மீது கடந்த 24-ஆம் தேதி படையெடுப்பு நடத்திய ரஷ்ய படைகள், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு,உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில்,கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே, ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நட்பு நாடான பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து,ரஷ்யா – உக்ரைன் இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை பெலாரசில் இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமான முடிவு காணப்படுமா? போர் நிர்த்தப்படுமா? என்று எதிர்பார்க்கப்படும் வேளையில்,போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசி வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,உக்ரைனின் நான்கு நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.அதன்படி,தலைநகர் கீவ்,கார்கிவ்,மரியபோல் மற்றும் சுமி நகரங்களில் ஆகிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையிலும் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறும் வகையிலும் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ஏற்கனவே,கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக கருங்கடலை ஒட்டியுள்ள வோல்னோவாகா மற்றும் மரியபோலின் சில இடங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதிலும் , அப்பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.