சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது!

உயிரிழந்த மாணவியின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மாணவி அஸ்வினியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மாணவி ஒருவர் சென்னையில் கல்லூரி வாசலில்  இளைஞரால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மாணவியை குத்திக்கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை கே.கே.நகரில்  தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பயின்று வந்தார். இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்துள்ளார்.

அப்போது இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், பின்னர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் தடுக்க முயன்றும் சராமாரியாக குத்து வாங்கியதில் ரத்தவெள்ளத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் தப்பி ஓடமுயன்றார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கிவிழுந்தார்.

மாணவியை தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் பெயர் அழகேசன் என்பதும் மதுரவாயிலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காதல் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.பலத்த காயமடைந்த அழகேசன் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர்  உயிரிழந்த மாணவியின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மாணவி அஸ்வினியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment