டி.டி.வி.தினகரன் வீட்டு நாயாக இருந்தோம்… அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு.!

T.T.V.Dhinakaran : முன்பு உங்கள் வீட்டு காவல் நாயாக இருந்தோம் என டிடிவி.தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி.

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் டிடிவி.தினகரன் ஆகியோர் களமிறங்குகின்றனர். டி.டி.வி.தினகரன், தங்கத்தமிழ்செல்வன் ஆகிய இருவருமே அதிமுக கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் என்பதால் இந்த தேர்தல் களம் மிக சுவாரஸ்யமாகவும், பிரச்சார களம் மிக தீவிரமாகவும் இருக்கிறது.

முன்னதாக தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் செய்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பபூன் (கோமாளி) என்று கூறியதாகவும், எடப்பாடி பழனிசாமியை அன்றே நினைத்து இருந்தால் அரசியலில் இருந்து காலி செய்து இருப்போம் என்றவாறு பேசியிருந்தார் என்று கூறப்படுகிறது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, கடந்த 15 ஆண்டுகளாக தேனி பக்கமே வராத டிடிவி.தினகரன். தற்போது தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். 10 ஆண்டுகளாக அம்மா உத்தரவின் பேரின் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தார். 20 ரூபாய் டோக்கன் கொடுத்து R.K.நகரில் மக்களை ஏமாற்றி வெற்றி பெறச் செய்தவர். அடுத்ததாக கோவில்பட்டியில் போட்டுபோட்டு தோல்வி அடைந்தார். அவரை மக்கள் புறக்கணித்தனர். தற்போது கடைசி புகலிடமாக தேனி வந்துள்ளார். இங்கேயும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை காண்பது தேனி தொகுதியில் தினகரன் வெற்றி பெற்று இருந்தார். ஆனால் இப்போது இரட்டை இலை எங்கள் பக்கம் இருக்கிறது. அவர் எங்களை பபூன் என்று விமர்சிக்கிறார். ஆமாம், நான் பஃபூன் தான். அனைவரையும் சிரிக்க வைக்கும் பபூன். ஆனால் டிடிவி தீமை விளைவிக்கும் வில்லன். கிளைமேக்ஸில் அவர்தான் தோல்வியடைவார். அம்மா இருக்கும் வரையில் நாங்கள் அவருக்கு பயந்தோம். அது உண்மைதான்.

அம்மா இருக்கும்போது அவரை காண்பித்து நீங்கள் எங்களை பயமுறுத்தி வைத்திருந்தீர்கள். அப்போது உங்கள் பூச்சாண்டிக்கு நாங்கள் பயந்து இருந்தோம். உங்கள் வீட்டு காவல் நாயாக நாங்கள் இருந்துள்ளோம். ஆனால் இப்போது நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். சீரும் சிங்கங்களாக மாறி உள்ளோம்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் எங்கள் கடம்பூர் ராஜு அண்ணன் உங்களை அந்த தொகுதியில் தோக்கடித்தார். இப்போது, நாங்கள் உங்களுக்கு பயப்பட மாட்டோம். இப்போது நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு மரியாதை இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இங்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என ஆர்.பி.உதயகுமார் உரையாற்றினார் .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.