“நான் இரு குழந்தைகளுக்கு தந்தை;ரசாயன ஆயுதங்களை கொண்டு எங்களை தாக்க வாய்ப்பு” -ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் நிதியுதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் உயிரியல் ஆயுதங்களின் கூறுகள் தயாரிக்கப்பட்டதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன என்று  ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது.மேலும்,ரஷ்யா வழியாக இடம்பெயரும் பறவைகளை வைரஸ் சுமக்கப் பயன்படுத்துவதாகவும் உக்ரைன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில்,எந்தவொரு இரசாயன அல்லது பிற பேரழிவு ஆயுதங்களும் தங்கள் நாட்டில் உருவாக்கப்படவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதில் அளித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக ஜெலென்ஸ்கி கூறியதாவது “இது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது.நான் ஒரு  நாட்டின் ஜனாதிபதி,மற்றும் இரண்டு குழந்தைகளின் தந்தை.எந்த இரசாயனமும் அல்லது வேறு எந்த பேரழிவு ஆயுதங்களும் எங்கள் மண்ணில் உருவாக்கப்படவில்லை.

அது முழு உலகத்திற்கும் தெரியும்.அது உங்களுக்குத் தெரியும்.ஆனால், உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்த வாய்ப்புள்ளது. அவ்வாறு ரஷ்யா எங்களுக்கு எதிராக ஏதாவது செய்தால், அது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பெறும்’,என்று கூறினார்.

மேலும்,”உக்ரைனில் ‘டி-கெமிக்கலைசேஷன்’ செய்ய முடிவு செய்துள்ளீர்களா? அம்மோனியாவைப் பயன்படுத்துகிறீர்களா? பாஸ்பரஸைப் பயன்படுத்துகிறீர்களா? எங்களுக்காக வேறு என்ன தயார் செய்துள்ளீர்கள்?” ,என உக்ரைனுக்கு எதிராக 16 நாட்களாக தொடர்ந்து போரை நடத்தி வரும் ரஷ்யாவிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் துணை தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி, “உக்ரைன் பிரதேசத்தில் அமெரிக்காவின் இராணுவ உயிரியல் நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க” வெள்ளிக்கிழமை அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு உலக அமைப்புக்கு கோரிக்கை விடுத்தார்.ஆனால்,இந்த குற்றச்சாட்டுகளை அபாண்டமானது என்று கூறி அமெரிக்கா மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.