இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடும் மைதானத்தில் மின்சாரம் துண்டிப்பு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி ராய்ப்பூர் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் மின்கட்டண நிலுவையில் இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராய்ப்பூரில் அமைந்துள்ள இந்த மைதானம் பல சர்வதேச போட்டிகளை நடத்தியது. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டி20 போட்டியை நடத்த உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றும் சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மின்சார வசதி துண்டிக்கப்பட்டது.

சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் தற்போது ஒரு தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தற்காலிக மின் இணைப்பு  பார்வையாளர்களின் கேலரி மற்றும் பெவிலியன் பெட்டியில்  மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டியின் போது மின்விளக்குகளை ஜெனரேட்டரில் இருந்து இயக்க உள்ளனர்.

இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு, அதன் பராமரிப்பு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்கட்டணம் செலுத்தாமல் இரு துறையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறைக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், இதுவரை மின்கட்டண நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.  2018-ம் ஆண்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து 3 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan