அதிமுக, பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுக, பாஜக நீட் தேர்வு தொடர்பாக நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததை தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்பின்னர் நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் அக்குழு சமர்ப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் 12-ஆம் பொதுத்தேர்வு மதிப்பெண்  அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்திகடந்த செப்.13-ம் தேதி சட்டமன்றத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நீட் விலக்கு சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அழுதார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தார். இதற்கு பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் வெளிப்படுத்தினர். இந்த சமயத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படியிருந்த மசோதா திருப்பி அரசுக்கே ஆளுநர் அனுப்பினார். இந்த சட்ட முன்வடிவு, மாணவர்களின் குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்று ஆளுநர் தெரிவித்தார்.

இச்சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவரின் விரிவான விளக்கங்களுடன் அவையின் மறுபரிசீலனைக்காக தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

இதனிடையே, நீட் விலக்கு தொடர்பாக நடைபெறும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து பாஜக விலகிக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதிமுக, பாஜக நீட் தேர்வு தொடர்பாக நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதா குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக, பாஜக புறக்கணிக்கின்றன. புறக்கணிப்பு என்பது எதிர்காலத்தில் மக்கல்லின் மூலமும் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Castro Murugan