முக்கிய பிரபலம் மரணம்;மிகுந்த வேதனையுடன் ஓபிஎஸ்,இபிஎஸ் இரங்கல்!

எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி அவர்களின் மறைவுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.

எம்ஜிஆர் அவர்கள் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நாளிதழில் பார்த்த லீலாவதி அவர்கள் தனக்கு திருமணம் ஆகியிருந்தாலும் தனது கணவனின் அனுமதியுடன் அவரது சித்தப்பா எம்ஜிஆருக்கு சிறுநீரகம்  தானம் செய்ய முன்வந்தார்.

அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்ட நிலையில், லீலாவதியின் சிறுநீரகம் எம்ஜிஆர் அவர்களுக்கு பொருத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தை தானம் செய்த லீலாவதி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,லீலாவதி அவர்களின் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மேலும்,இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நமது இதய தெய்வம், நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் திரு. எம்.ஜி. சக்கரபாணி அவர்களின் அருந்தவப் புதல்வி திருமதி லீலாவதி அம்மையார் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தோம்.

புரட்சித் தலைவர் அவர்கள் 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து, நம் புரட்சித் தலைவரை வாழவைத்த போற்றுதலுக்குரிய பண்பாளர் திருமதி லீலாவதி அம்மையார் அவர்கள், 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து, இன்று இயற்கை எய்தியதை அறிந்த புரட்சித் தலைவரின் கோடானு கோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.

அன்புச் சகோதரி திருமதி லீலாவதி அம்மையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.