நீட் தேர்வு குழு:பாஜக வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மாணவி மனுதாக்கல்..!!

நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மாணவி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அந்த வகையில்,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

இதனையடுத்து, நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.

இதனைத் தொடர்ந்து,நீட் தேர்வு பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:”மருத்துவ கல்வி தரத்தை மேம்படுத்தவே கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி,அதன் அடிப்படையிலே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.எனவே,நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் நாடு முழுவதுக்கும் பொதுவானது.மேலும்,நீட் தேர்வு இல்லையென்றால் சாதாரண அறிவாளி மாணவர் கூட மருத்துவர் ஆகிவிடுவார்”,என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,நாகராஜன் தொடர்ந்த வழக்கை எதிர்த்து,அதனை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் தற்போது மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும்,இதுதொடர்பாக மனுவில் மாணவி கூறியிருப்பதாவது:

“நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வு முடிவுகளை நீதிபதி குழு,தமிழக அரசிடமே அளிக்கவுள்ளது.

எனவே,மாணவர்கள் பிரச்சனையில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை. மேலும்,அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,மாணவி அளித்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திராவிட கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.