சசிகலாவின் 1600 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டதா? வழக்கறிஞர் விளக்கம்

சசிகலாவின் சொத்துகள் முடக்கபட்டதாக கூறுவது தவறானது என்று  சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 -ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள் ,அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கிய ஆவணங்களும் சிக்கியதை தொடர்ந்து சசிகலா உறவினர்கள் உட்பட அனைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறையினர் ரூ.1600 கோடிக்கு மேல் 7-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கியுள்ளதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் இந்த தகவலுக்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சசிகலாவின் சொத்துகள் முடக்கபட்டதாக கூறுவது தவறானது. 2017-ஆம் ஆண்டில் முடக்கப்பட்ட சொத்துக்கள் உரிய ஆவணங்களை சமர்பித்த பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.