செப்டம்பர் 1 முதல் தாமத ஜிஎஸ்டிக்கு வட்டி வசூல் – சிபிஐசி அதிரடி முடிவு.!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தாமதமாக செலுத்துவதற்கான வட்டி செப்டம்பர் 1ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) முடிவு செய்துள்ளது.

அதாவது, கடந்த 2017-ஆம் ஆண்டு (ஜிஎஸ்டி) வரி பிடிப்பு அமலுக்கு வந்த பிறகு, பலர் ஜிஎஸ்டி வரியை தாமதமாக செலுத்தியுள்ளனர். அப்படி தாமதமாக செலுத்தப்பட்ட ஜிஎஸ்டிக்கு வரவேண்டிய வட்டி நிலுவை தொகை ரூ.40,000 கோடியை மீட்டெடுப்பதற்கான உத்தரவு குறித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.  மொத்த வரி நிலுவைக்கும் இந்த வட்டி வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் தொழில்துறையினர் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். இருப்பினும், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) வரி நிலுவைக்கு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் வட்டி வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

மத்திய மற்றும் மாநில நிதி மந்திரிகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில், மார்ச் மாதம் தனது 39 வது கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்த வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஜிஎஸ்டி தாமத கட்டணத்துக்கு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து வட்டி வசூல் நடைமுறை தொடங்கும் என்றும் இதற்கு முன்பு உள்ள நிலுவைகள் வசூலிக்கப்படமாட்டாது எனவும் கூறியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடந்த ஜிஎஸ்டி 39வது கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இது செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வரி செலுத்துவோருக்கு, முந்தைய தாமதத்துக்கு வட்டி செலுத்துவதில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்