இந்தியாவின்  பொருளாதாரம் மூன்று செயல்களால் அழிக்கப்பட்டுள்ளது – ராகுல் காந்தி

” இந்தியாவின்  பொருளாதாரம் மூன்று செயல்களால் அழிக்கப்பட்டுள்ளது ” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் பேசிய நிதியமைச்சர், நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்றும் மாநிலங்களுக்கு உதவும்படி ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும் எனவும் கூறினார்.

மேலும் கூறுகையில், ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து மாநிலங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க ஆலோசிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.குறிப்பாக கொரோனா என்பது கடவுளின் செயல், ஜிஎஸ்டி வசூல் கொரோனா காரணமாக பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,” இந்தியாவின்  பொருளாதாரம் மூன்று செயல்களால் அழிக்கப்பட்டுள்ளது “. முதலில்  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அழிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக தவறான சரக்கு மற்றும் சேவை வரிக் கொள்கையால்   அழிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட  ஊரடங்கு நடவடிக்கையை தவறாக பயன்படுத்தியது .இவை மூன்றால் பொருளாதாரம் அழிந்தது என்று பதிவிட்டுள்ளார்.