“I Don’t Care;இவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல,ஆன்மிக வியாதிகள்” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!

திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.இதனைத் தொடர்ந்து,ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்த நிலையில்,1,71,169 பயனாளிகளுக்கு ரூ.693.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

இதனிடையே,விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள்:”அண்ணாமலையார் கோயில் என்பது தமிழகத்தின் சொத்து, அதனை கடந்த 2004-இல் பக்தர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மீட்டுக்கொடுத்தது திமுகதான்.இதனால்,அண்ணாமலையார் கோவிலுக்கும் திமுகவுக்கும் நீண்ட உறவு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால்,இந்த வரலாறு இன்று மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு தெரியாது.நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல,ஆன்மீகத்தின் பெயரால் மதத்தால்,சாதியால் மனிதர்களை பிளவுப்படுதுபவர்களுக்கு நாங்கள் எதிரிகள்.

மேலும்,அறம் என்றால் என்ன? என்று அறிவுக்கு எட்டாத மூட கருத்துக்களை தூக்கிச் சுமக்கும் சிலருக்கு போலியான பிம்பங்களை கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும்,பொய்களும்தேவை.மேலும்,மனிதர்களை பிளவுபடுத்துவதற்காக ஆன்மீகத்தை பயன்படுத்துபவர்கள்,உண்மையான ஆன்மீகவாதியாக நிச்சயமாக இருக்க முடியாது.அவ்வாறு இருப்பவர்கள் ஆன்மீக வியாதிகள்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,முதல்வர் பேசுகையில்:”அறிவார்ந்த யார் வேண்டுமானாலும் தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லலாம்,அதனை நாங்கள் செயல்படுத்துவோம்.மாறாக,பொய்யும்,புரட்டும் மலிவான விளம்பரம் தேடக்கூடிய வீணர்களைப் பற்றி ‘I Don’t Care’,நான் மட்டுமல்ல நீங்கள் ஒவ்வொருவரும் ‘I Don’t Care’ என்று கூறி நகருங்கள்”,என்றார்.

இறுதியில்,”1957 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட அண்ணா,இந்த உலகத்தில் எங்களுக்கு இரண்டு எஜமானர்கள் தான் உண்டு.அதில் ஒன்று ‘எங்களது மனசாட்சி,மற்றொன்று இந்த நாட்டு மக்கள்’ என்று கூறினார்.அதன்படி,மனசாட்சிக்கு விரோதம்’ இல்லாமல் இந்த அரசு மக்கள் பணியாற்றி வருகிறது.என்மீது நீங்கள் வைத்த நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.இதைதான் எல்லாவற்றிற்கும் மேலாக நான் நினைக்கிறேன்.அந்த நம்பிக்கையை காப்பாற்ற என்றும் உங்களில் ஒருவனாக உழைப்பேன்’,என்று தனது உரையை முதல்வர் நிறைவு செய்தார்.

Leave a Comment