சூர்யாவை பற்றி தனிபட்ட முறையில் விமர்சனம் செய்யும் அவசியம் எனக்கு இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

சூர்யாவை பற்றி தனிபட்ட முறையில் விமர்சனம் செய்யும் அவசியம் எனக்கு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்  சூர்யா, புதிய கல்வி கொள்கையை கடுமையாக சாடினார். அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியரின்றி படிக்கும் போது நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள் என கேள்வி எழுப்பினார்.இந்த கருத்துக்கு அதிமுக  மற்றும் பாஜகவை  சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு கூறுகையில், சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதாகவும் எதையும் நன்கு தெரிந்து பேச வேண்டும் என்று கூறினார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் டிவிட்டரில் #SuriyaFCWarnsBJPnADMK என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் புதிய வரைவு கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கு எதிர் கருத்துகள் வருவது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ  மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், மாற்றுக் கருத்து சொல்ல எங்களுக்கும் உரிமை உண்டு. எதையும் அறைகுறையாக படித்து கருத்து சொல்ல கூடாது என்று சொன்னேனே தவிர சூர்யாவை பற்றி தனிபட்ட முறையில் விமர்சனம் செய்யும் அவசியம் எனக்கு இல்லை என்று கூறினார்.