அடேங்கப்பா..!தீபாவளியை முன்னிட்டு எத்தனை பேர் வெளியூர் பயணம்?,எவ்வளவு வசூல் தெரியுமா? – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!

சென்னை:தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 இலட்சத்து 57 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், இதன் வாயிலாக மொத்தமாக 8 கோடியே 37 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில், மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் வாயிலாக, 14,24,649 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட  முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக கொரோனா நோய் தொற்று பெருமளவு குறைந்துள்ளது. தீபாவளி முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லுகின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், அரசு செயல்படுத்தியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

தீபாவளிக்கு முன்பு பேருந்துகள் இயக்கம்:

தீபாவளி திருநாளை முன்னிட்டு, கடந்த 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் சென்னையில் 6 இடங்களிலிருந்து மொத்தம் 9,472 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,08,049 பயணிகளும், பல்வேறு பகுதிகளிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4,960 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,96,000 பயணிகளும் என மொத்தமாக 14,432 பேருந்துகள் வாயிலாக, 7,04,049 பயணிகள் பயணம் செய்தனர்.

தீபாவளிக்கு பின்பு பேருந்துகள் இயக்கம்:

தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், கடந்த 05.11.2021, 06.11.2021, 07.11.2021 மற்றும் 08.11.2021 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 10,987 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5,49,350 பயணிகளும், பல்வேறு இடங்களிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 3,425 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,71,250 பயணிகளும் என மொத்தமாக 14.412 பேருந்துகள் வாயிலாக, 7,20,600 பயணிகள் பயணம் செய்தனர்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில், மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் வாயிலாக, 14,24,649 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

முன்பதிவு:

தமிழகம் முழுவதும் ஒரு இலட்சத்து 57 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக மொத்தமாக 8 கோடியே 37 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த பேருந்துகள் இயக்கம்:

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 01, 02, 03 மற்றும் 04.11.2021 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,694 தினசரி பேருந்துகளுடன், 966 சிறப்புப் பேருந்துகள் 3 கோடியே 19 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 4 கோடியே 33 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக 80 கோடியே 12 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டை விட அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 3,705 தினசரி பேருந்துகளும், 83 சிறப்புப் பேருந்துகளும் 64 இலட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, ஒரு கோடியே 52 இலட்சம் பயணிகள் அதிகமாக பயணம் செய்ததன் மூலம். 12 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்தள்ளது.

அதனைத் தொடர்ந்து, தீபாவளிக்கு பின்பு, கடந்த 05, 06. 07 மற்றும் 08.11.2021 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 15,903 தினசரி பேருந்துகளுடன், 519 சிறப்புப் பேருந்துகள் 2 கோடியே 88 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 3 கோடியே 93 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக 74 கோடியே 36 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டை விட அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 1,882 தினசரி பேருந்துகள், 42 இலட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, ஒரு கோடியே 35 இலட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்ததன் வாயிலாக 7 கோடி 39 இலட்சம் ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.